கராத்தே பிறந்தநாள்... 3,000 பேருக்கு பிரியாணி விருந்து
சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனது பிறந்தநாளை கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு விமரிசையாக கொண்டாடினார்.
காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் திமுக மீது கடும் கோபத்தில் இருப்பது, அண்மைக்காலமாக அவர் அளிக்கும் பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் மூலம் தெளிவாக புரிகிறது. காங்கிரஸில் இருந்து தன்னை நீக்க வைத்தது திமுக தலைவர் ஸ்டாலின் என்பது அவரது குற்றச்சாட்டு. இதனால் தொடர்ந்து ஸ்டாலினுடன் கருத்துப்போர் நடத்திக்கொண்டிருக்கிறார்.
மு.க.ஸ்டாலினை கோபப்படுத்தும் வகையில் எதிர் அறிக்கை வெளியிடுவது, ரஜினிதான் அடுத்த முதல்வர் எனக் கூறுவது இப்படி அறிக்கைப்போர் நடைபெற்று வரும் சூழலில், நேற்று தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி அசத்திவிட்டார் கராத்தே தியாகராஜன். சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லம் அருகே மேடை அமைத்து தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
மேலும், நிகழ்ச்சிக்கு நடிகர் ராதாரவி, திண்டிவனம் ராமமூர்த்தி , உள்ளிட்டோரை அழைத்து திமுகவை எரிச்சல் படுத்தும் வகையில் பேச வைத்தார். விழாவில் பேசிய ராதாரவி தனக்கே உரிய பாணியில், ரஜினி பின்னால் நிற்க தாம் தயார் என ஆரம்பித்து திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். இதேபோல், கராத்தே தியாகராஜன் போல் ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமானவர் என்றும், அது கூட தலைமைக்கு புரியவில்லை எனவும் தெரிவித்தார்.
கராத்தே தியாகராஜனுக்கு வாழ்த்துச்சொல்ல திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். தனக்கு வாழ்த்துச்சொல்ல வந்த அனைவருக்கு பிரியாணி விருந்து அளித்து வழியனுப்பி வைத்தார் கராத்தே தியாகராஜன்.