போதைப்பொருள் கும்பல் போனில் இருந்த நம்பர்.. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது.. 12 மணி நேரம் விசாரணை!
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான நம்பரை வைத்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான மாணவர்கள் கொடுத்த தகவலின்படி, மண்ணடி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைதாகினர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா மட்டுமின்றி அதிக விலை கொண்ட மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்களும் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, யாரையெல்லாம் தொடர்புகொண்டு அவர்கள் கஞ்சா பொட்டலங்கள், மெத்தபெட்டமைன்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்தனர் என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, காட்டாங்கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னை தனிப்படை போலீசார், காட்டாங்கொளத்தூர் சென்று அறையில் பதுங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரைக் கைது செய்து விசாரித்தனர்.
அவர்களது அறையில் கஞ்சா ஆயில் உட்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் தொடர்ந்து துப்பு துலக்கினர். இதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) போன் நம்பரும் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த அலிகான் துக்ளக்கை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவருடன் மேலும் 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக அலிகான் துக்ளக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் விஸ்காம் படித்த அலிகான் துக்ளக், தற்போது சினிமாவில் உதவி இயக்குநராகப் பணி செய்து வருகிறார். அவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்தியதோடு, சினிமா துறையினர், கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பலருக்கும் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மீனா போதை மருந்து வைத்திருந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் மகனிடம் விசாரணை நடைபெற்று வருவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications