தீபாவளிக்கு நிம்மதியா சொந்த ஊர் போகலாம்.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் முக்கிய மாற்றம்! மக்கள் ஹாப்பி
சென்னை: விடுமுறை அறிவிக்கப்பட்டாலே சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். அதேபோல விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்போதும் மக்கள் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக ஜிஎஸ்டி சாலையில் அக்.22 வரை கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தாம்பரம் மாநகர காவல்துறை, பின்வரும் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.

கனரக வாகனங்கள் பயணிக்கும் பாதை
அக். 17, 18 ஆம் தேதிகளில் சென்னை மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம். மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம், ஜிஎஸ்டி நோக்கி வரும் கனரக வாகனங்கள், மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம்-திருவண்ணாமலை திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், ஓரகடம் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு -ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
திருப்பி விடப்படும் வாகனங்கள்
அக். 21, 22 ஆம் தேதிகளில் செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம். சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பி விடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம். இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக கனரக வாகனங்கள், வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாகத் திருப்பிவிடப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நெரிசலுக்கு காரணம்
கனரக வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பிவிடப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் விரைவாக செல்ல முடியும். ஆனால் இந்த போக்குவரத்து மாற்றம் மூலம், நிரந்தரமாக பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்று பொது போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கின்றன. ஒன்று பொதுப்போக்குவரத்து குறைவாக இருப்பது, இரண்டாவது ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி.
இந்த இரண்டில் முதல் விஷயத்தை அரசு நினைத்தால் உடனே சரி செய்ய முடியும். அதாவது ஒவ்வொரு பண்டிகைக்கும், விடுமுறை நாட்களுக்கும் இத்தனை பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆனால் அவையெல்லாம் மக்கள் கூட்டத்திற்கு போதுமானதாகவே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
கடந்த ஆண்டு என்ன நடந்தது?
கடந்த ஆண்டு தீபாவளி விடுமுறைக்கு சுமார் 15 லட்சம் மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 5 லட்சம் மக்கள் ரயில் மூலம் சென்றால் என்று வைத்துக்கொண்டாலும், மீதமுள்ள 10 லட்சம் மக்கள் பேருந்தைதான் நம்பியிருந்தனர். ஆனால் தீபாவளிக்கு இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை 11,176. இதில் சிறப்பு பேருந்துகளும் அடங்கும். ஒரு பேருந்தில் அதிகபட்சம் 52 பேர் பயணிக்கலாம் எனில், மொத்தமாக 5.81 லட்சம் பயணிகளுக்கு மட்டுமே இந்த பேருந்துகள் போதுமானதாக இருந்தது. மீதமிருந்த மக்கள் ஆம்னி பேருந்து மற்றும் கார்களில் பயணித்திருக்கின்றனர்.
தீர்வுதான் என்ன?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கிறது என்பதுதான். தீபாவளி விடுமுறைக்கு முந்தைய நாளில், பரனூர் சுங்கச்சாவடியை 36 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்றிருக்கின்றன. இதில் கார்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் கார்களும், தனியார் வாகனங்களும்தான்.
பொதுத்துறை வாகனங்களின் எண்ணிக்கை அதிரிக்கப்படும்போது, மக்கள் கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள். எனவே பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தரமான அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டும். அதுவே சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நிரந்தர தீர்வை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications