அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கு.. ஹைகோர்ட்டில் முக்கிய நகலை தாக்கல் செய்த இபிஎஸ் தரப்பு
சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால பொதுச் செயலாளர்
இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட (3,4,5,6,7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர்
அப்போது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ,உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நகலை சமர்பித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இதே அமர்வு, பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதால் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தீர்ப்பு நகல்
மேலும் எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பு நகலை படித்து பார்க்க அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரம் ஒத்திவைத்தனர். அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் தனி நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பு ஒபிஎஸ்ஸுக்கு ஆதரவானது. அது போல் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவில் இரட்டை நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு எடப்பாடிக்கு ஆதரவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications