பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதில் விதிமீறலா? நிரூபிக்காவிட்டால்! மனுதாரருக்கு நீதிபதி வார்னிங்
சென்னை: தேசிய மலரான தாமரை-யை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்துள்ளது.
தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான T.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தனது மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக அக்டோபர் 26 ஆம் தேதியே விசாரிக்க கோரிய நிலையில் அதை நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமரை சின்னத்தை பா.ஜ.வுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் உள்ளது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று, விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இது விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எனவும், சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடுமையான அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள், எச்சரிக்கை விடுத்தனர்.











Click it and Unblock the Notifications