சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நடிகர் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் விஜயலட்சுமி. அவர் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுடைய படத்தில் நடித்திருந்தார்.

அப்போது சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் மீது புகாரை அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகியிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு எதிராக விஜயலட்சுமி பதிவு செய்த பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. மேலும் சீமானின் மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு விஜயலட்சுமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி நீதிபதி இளங்திரையன் முன்பு வந்தது. அப்போது "இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்" என நீதிபதி, காவல் துறையிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முகிலன், இது 376 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் சீமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சீமான் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலோ கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார். மேலும் பாலியல் பலாத்கார வழக்கை விஜயலட்சுமி திரும்ப பெற்றாலும் இது பாலியல் வன்கொடுமை என்பதால் இதை விசாரிக்காமல் விட முடியாது என நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications