பட்டா நிலத்தை அபகரிக்க திட்டம்! புதைத்த உடல் மாயம்! திருவள்ளூர் ஆட்சியருக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பட்டா நிலத்தை அபகரிக்கும் நோக்கில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், திருவள்ளுர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் கிராமத்த்தில் உள்ள தன்னுடைய பெயரிலும் தன் குடும்பத்தார் பெயரிலும் சொந்தமான நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்நிலங்களை அபகரிக்க பட்டரைபெரும்புதூர் கிராமத்தை சேர்ந்த சிலர் முயற்சித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9 ம் தேதி பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் காலமான கண்ணம்மாள் என்பவரின் உடலை, தங்கள் நிலத்திற்கு செல்லும் சாலையில் புதைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக திருவள்ளுர் தாசில்தார், திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தன் நிலத்திற்கு செல்லும் சாலையில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து இடுகாட்டில் புதைக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயண பிரசாத், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications