நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு விதிகளை மீறி போஸ்டர் ஒட்ட அனுமதிக்கக் கூடாது- ஹைகோர்ட்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட எவருக்கும் அனுமதியளிக்க கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 117-வது வார்டில் தேர்தலில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட தடை உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட அனுமதிக்க கூடாது என மாநகராட்சிக்கும், போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், மீறி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டனர்.
தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வேட்பாளர்கள் அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டக் கூடாது என விளம்பரம் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநகராட்சி, மாநில தேர்தல் ஆணையம், காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications