பரோல் கோரி வழக்கு.. குற்றவாளிகள் மனம் திருந்த வாய்ப்பளித்த ஹைகோர்ட் தீர்ப்பு!
சென்னை: ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக, குற்ற வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 54 வயதான கணவர் பி.நாகேந்திரனுக்கு ஒரு மாத விடுப்பு வழங்க கோரி சிறை கண்காணிப்பாளரிடம் அவரது மனைவி மனு கொடுத்திருந்தார்.

நாகேந்திரன் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழான மற்றொரு குற்ற வழக்கு விசாரணையில் உள்ளதால் சுட்டிக்காட்டி விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுத்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து கணவருக்கு விடுப்பு வழங்கக் கோரி நாகேந்திரனின் மனைவி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்து பிறப்பித்துள்ள தீர்ப்பில், விடுப்பில் செல்வதை குற்றவாளிகள் உரிமையாக கோர முடியாது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதற்காக தண்டனை காலம் முழுவதும் விடுப்பு வழங்காமல் மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் வைத்து, மறுமலர்ச்சி பெறுவதற்கான வழியை தடுக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்கு உள்ளவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்பதையும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டுமென சிறைத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளனர்
நாகேந்திரன் மீதான மற்றொரு வழக்கு நிலுவையில் இருப்பதாலேயே அவரை விடுப்பில் செல்ல அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவு சரியென குறிப்பிட்டு, நாகேந்திரனின் மனைவியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
பொதுவாக குற்றவழக்குகளில் சிக்கினால் 2 ஆண்டுகள் கழித்த பிறகுதான் பரோல் கிடைக்கும். அப்போதுதான் அவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க முடியும். அந்த பரோல் கிடைப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும். அவற்றை தாண்டிதான் சிறியதொரு விடுப்பில் குடும்பத்தினரை பார்க்க வருவார்கள்.
இந்த நிலையில் ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்றவர்களுக்கு குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் விடுப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது குற்றவாளிகள் புத்துணர்வு பெறவும் அவர்கள் மனம் திருந்தவும் ஒரு வாய்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications