கடலூர் மங்களூர் யூனியன் பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் நடத்த மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சென்னை: கடலூர் மாவட்டம் மங்களூர் யூனியன் பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலை நடத்த அனுமதி கோரிய தேர்தல் ஆணைய கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க கடந்த 11-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டம் மங்களூர் யூனியன் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் சுகுனா மற்றும் அதிமுக வேட்பாளர் மலர்விழி ஆகியோர் தலா 12 வாக்குகள் பெற்றதால், இருவரும் வெற்றி வாய்ப்பு பெறாமல் தேர்தல் சமனில் முடிந்தது.
இதனையடுத்து குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறி தேர்தலை 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக வேட்பாளர் சுகுனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி ஆதிகேசவலு நேற்று மங்களூர் பஞ்சாயத்து யூனியன் தலைவருக்கான மறைமுக தேர்தலுக்கு நடத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மாநில தேர்தல் ஆணைய தரப்பில் மங்களுர் பஞ்சாயத்து துணை தலைவர் மறைமுக தேர்தல் நடத்த அனுமதி கோரினர். இதற்கு திமுக தரப்பில் வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜராகி, மங்களுர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
இதை பதிவு செய்த நீதிபதி,கடலூர் மாவட்டம் மங்களூர் யூனியன் பஞ்சாயத்து துணை தலைவருக்கான மறைமுக தேர்தலை நடத்த அனுமதி கோரிய தேர்தல் ஆணைய கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications