கோயம்பேட்டில் தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்த ஒரு ஏக்கர் இடம் ஒதுக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாத இடத்தை ஒதுக்க வேண்டுமென கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அதில் வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு தற்காலிகமாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ. மற்றும் கோயம்பேடு மார்கெட் கமிட்டி ஆகியவற்றிற்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு
மார்கெட்
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்கெட் கமிட்டி தரப்பில் 800 வாகனங்களை 8 இடங்களில் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சங்கத்தினரை அனுமதிக்காததால்தான் விலை உயர்ந்தது என கூறுவது தவறு என்றும், அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் எவரும் தடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தக்காளி விலை
கடந்த வாரத்தை விட தக்காளி விலை தற்போது குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தக்காளி விற்பனை இடத்திற்கு அருகில் உள்ள ஏ சாலை எஃப் பிளாக் அருகில் உள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. காலி மைதானத்தில் தக்காளியை லாரியிலிருந்து சிறு வாகனங்களுக்கு மாற்ற மட்டுமே பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்ய மாட்டோம். எனவும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கபட்டது.
வியாபாரிகள்
இவற்றை பதிவு செய்த நீதிபதி, தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தற்காலிக ஒரு ஏக்கருக்கும் குறையாத இடத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வியாபாரிகளும் பொருட்களை ஏற்றி இறக்க மட்டும் நான்கு வாரங்களுக்கு இடைக்காலமாக ஒதுக்கும்படி மார்கெட் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் அந்த இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு வாரங்கள்
சோதனை முறையில் இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறையை கடைபிடித்து, அதில் உள்ள சாதக பாதகங்களை இரு தரப்பும் இரண்டு வாரங்களுக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை டிசம்பர் 15-ஆக தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். தொடர் மழை, வரத்து குறைவு, பிற மாநில வாகனங்கள் வராதது போன்ற காரணங்களால் அதிகளவில் உயர்ந்துள்ள தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.