கோயம்பேடு உணவு தானிய சந்தை மூடல்.. தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், 1996-ஆம் ஆண்டு முதல் கொத்தவால் சாவடியில் இயங்கிய காய்கறி சந்தை கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. 2014 ம் ஆண்டு முதல் மொத்த காய்கறி விற்பனை உரிய அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 24 ம் தேதி 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதனால், காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்ததால் கரோனா தொற்று பரவியதால் மே 5 ம் தேதி முதல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.
சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில் அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், சில விற்பனையாளர்களால் உணவு தானிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சிறப்பு அதிகாரி,சி.எம்.டி.ஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி, சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications