விசாரணை கைதிக்கு சிகிச்சை அளித்த விவகாரம்.. கோவை கமிஷனர் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: காவல்துறையினரால் சுடப்பட்ட சஞ்சய் ராஜாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தெளிவில்லாத ஆவணத்தை தாக்கல் செய்த காவல் ஆய்வாளரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்ற போது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய்ராஜாவின் காலில் குண்டடிப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சஞ்சய் ராஜா
இந்நிலையில் சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்தவும், உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

ரேஸ் கோர்ஸ்
அப்போது கோவை ரேஸ் கோர்ஸ் நிலையத்தினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கொலை வழக்கில் சரணடைந்தவரை சிறையில் அடைத்துள்ளதால் சட்டவிரோத காவலில் இருப்பதாக கருத முடியாது என்றும், ஆட்கொணர்வு மனுவில் சிகிச்சை மற்றும் விசாரணை தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

காலில் பட்ட தோட்டா
ஆனால் மனுதாரர் தரப்பில், காலில் தோட்டா பட்டு அடிப்பட்ட நிலையில் கோவையில் அனுமதிக்கபட்டவரை கடலூர் சிறைக்கு மாற்றியதாகவும், அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், வாழ்வா சாவா என்ற நிலையில் இருப்பதாக என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ஒருவர் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவர் இந்த நாட்டின் குடிமகன் இல்லையா என்றும், அவர் சிகிச்சை பெற உரிமையில்லையா என்றும் கேள்வி எழுப்பி, சிகிச்சை குறித்த விவரங்கள் பதில் மனுவில் விளக்கம் அளிக்காதது துரதிஷ்டவசமானது என தெரிவித்தனர்.

ரேஸ் கோர்ஸ் இன்ஸ்பெக்டர்
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ரேஸ் கோர்ஸ் காவல் ஆய்வாளர், சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்த விவரங்கள் என கூறி, படிப்பதற்கு தெளிவில்லாத இரண்டு பக்க நகலை நீதிபதிகளிடம் வழங்கினார். அந்த நகலை பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இதுபோன்ற நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். அதனடிப்படையில் இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

சஞ்சய் ராஜா
மேலும், சஞ்சய் ராஜாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முறையான அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர். பின்னர், கடலூர் சிறையில் உள்ள சஞ்சய் ராஜாவை அவரது தரப்பு வழக்கறிஞர் நாளை சென்று சந்திக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (மார்ச் 29) தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications