8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது.. அரசாணையும் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி!
Recommended Video
சென்னை: சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அழிக்கப்படுவதை விவசாயிகள் எதிர்த்தனர். பல்வேறு தீவிர போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
வழக்கு தொடர்ந்தவர்கள்
இந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில்விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
செல்லாது
8 மாதங்களாக விசாரணை நடத்திய நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது.
பழைய நிலை
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பிறகு தான் திட்டத்தை செயல்படுத்த முடியும். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசாணை ரத்து
அத்துடன் சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கான அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த திட்டத்திற்கு புதிதாக அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.