நாட்டை கூறுபோட முயலும் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது...தபெதிகவுக்கு குட்டு வைத்த ஹைகோர்ட்!
சென்னை: வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
'வடஇந்தியர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரிவினையை தூண்டும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் இதுபோன்ற கூட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என்றார். மேலும்
சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டு ஒருங்கிணைந்த இந்தியாவை, கூறுபோட முயலும் செயலை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி வெங்கடேஷ் திட்டவட்டமாக கூறினார்.
வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனமும் தெரிவித்தது.
இதையடுத்து வேறு தலைப்புடன் கூட்டம் நடத்த விரும்பினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறிய நீதிபதி வெங்கடேஷ், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications