"சரி! இன்னும் எத்தனை நாள் சிறையில் வைக்க போகிறீர்கள்?" மெரினா லூப் ஜோடிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி
சென்னை: சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்க போகிறீர்கள் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.












Click it and Unblock the Notifications