சிறையில் உள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சிறை துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து உண்ணாவிரதம் இருந்ததால் முருகனின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க வேண்டும்.
முருகனை அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்கள் பார்க்க அனுமதிக்க கோரியும், தனிமை சிறையில் உள்ள முருகனை சாதாரண சிறைக்கு மாற்ற கோரியும் அவரது உறவினர் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

சார்ஜர் கத்தி பறிமுதல்
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறை துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் நடராஜன், பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், முருகன் வைக்கப்பட்டிருந்த ப்ளாக்- 1 சிறையில் கடந்த அக்டோபர் 18 மற்றும் நவம்பர் 19ம் தேதிகளில் சிறைதுறையினரால் நடத்தப்பட்ட சோதனையில், அவரது அறையில் இருந்து செல்போன், சார்ஜர், கத்தி, பழைய ப்ளேட் உள்ளிட்ட 13 பொருட்கள் கைபற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

3 மாதம் தண்டனை
சிறை விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த காரணத்தினால், 3 மாதத்திற்கு முருகனை யாரும் சந்திக்க கூடாது என தண்டனை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனிமைச் சிறையில்லை
அதேபோல, முருகன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும், செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ள ப்ளாக்-2 சிறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் தெரிவித்தார்.

உறவினர்களை பார்க்க
இதையடுத்து, முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத கால தண்டனையை திரும்ப பெற்று கொள்ள சிறை துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முருகன் அவரது மனைவி மற்றும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

உண்ணாவிரதம்
மேலும், முருகனை வேறு ப்ளாக்கிற்கு மாற்றியது தொடர்பான நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், முருகன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட அறிவுறுத்துமாறு மனுதாரர் வழக்குரைஞரிடம் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்..












Click it and Unblock the Notifications