மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு!
சென்னை: பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக கழிப்பிடம் அமைப்பது குறித்து விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிட கோரி, ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் பொது இடங்களில் ஏற்கனவே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடங்களை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் படிப்படியாக பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்படும் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போதைக்கு பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற பொது இடங்களில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications