அதிமுக முன்னாள் எம்.பி மீதான சிறை தண்டனை ரத்து.. “சிபிஐ குற்றச்சாட்டை நம்ப முடியல” ஐகோர்ட் தீர்ப்பு!
சென்னை: லஞ்சம் கொடுத்து வங்கிக் கடன் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரனுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014 முதல் 2019 வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.பியாக இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவரும் நிர்வாகப் பொருளாளருமாக இருந்தார். இவர் தனக்குச் சொந்தமான கல்லூரியின் விரிவாக்கத்திற்கு வங்கியில் ரூ. 20 கோடி கடன் கேட்டுள்ளார். ஆனால், போதிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்று கூறி வங்கி அதிகாரிகள் முதலில் நிராகரித்துள்ளனர். பின்னர் ராமச்சந்திரன், வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பான புகாரின் பேரில், அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட பிறகு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
கடன் மோசடி வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் குற்றவாளியான வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.13.10 லட்சம் அபராதமும் இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளியான ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரனுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.1.11 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 4வது குற்றவாளியான கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.15.20 கோடி அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் முன்னாள் எம்.பி ராமச்சந்திரன். இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. சிபிஐ குற்றச்சாட்டு நம்பும் வகையில் இல்லை எனக் கூறி, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications