"வருமானத்திற்கு அதிகமான சொத்து!" அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கில்.. இன்று இறுதி விசாரணை
சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது வருவாய்த் துறை அமைச்சராக இருப்பவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவர் கடந்த 2006- 2011 திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக இருந்தார்.

2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் அவர் 44.59 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், இந்த தீர்ப்பைத் தாமாக முன்வந்து சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்திருந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையும், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க எந்த காரணமும் இல்லை என்றும் அமைச்சர் என்பதாலேயே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்களை வைத்து வாதிடுமாறும், தங்களுக்கு மற்ற வழக்குகளைப் போலத் தான் இது என்றும் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் விரிவான மனு தாக்கல் செய்ய கேகேஎஸ்எஸ்ஆர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி. வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications