"நீங்க அறிவிக்கிறீங்களா.. நாங்க அறிவிக்கட்டுமா".. யானை வழித்தடம் பிரச்சனையில் சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் யானை - மனித மோதல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் யானை - மனித மோதல் பெரிய சேதங்களை உருவாக்கி வருகிறது. யானை வழித்தடம் குறித்து அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது நீதிமன்றம், "திட்டமிட்ட தேதியில் அரசு இறுதி அறிக்கையை வெளியிடாமல் இருந்தால், அரசு குழு தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் நாங்களே யானை வழித்தடத்தை அறிவிப்போம்." என்று அதிரடி காட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றில் பல ஆயிரக்கணக்கான யானைகள் உள்ளன. முக்கியமாக முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகளவு உள்ளன. காட்டை ஒட்டியுள்ள யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீண்ட காலமாக புகார் உள்ளது.

யானை வழித்தடம் வழக்கு
அதனால் தான் யானைகள் தடம் மாறி ஊருக்குள் புகுந்து , யானை - மனித மோதல் அதிகரிப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் தற்போதுவரை தமிழ்நாட்டில் யானை வழித்தடம் குறித்து அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்படவில்லை. கடந்த வருடம் யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனாலும் தற்போதுவரை தமிழ்நாட்டில் யானை வழித்தடம் அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியாகவில்லை.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன், தமிழ்நாட்டில் யானை வழித்தடம் கண்டறிந்து அறிவிக்க வேண்டும். என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில் யானை வழித்தடங்களை கண்டறிய தமிழ்நாடு அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. யானை வழித்தடங்களை அறிவிப்பதற்கான கால அட்டவணையும் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
சாட்டையை சுழற்றிய நீதிபதிகள்
இந்த வழக்கு நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, சதீஷ்குமார் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்," யானை வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாக அரசு தாக்கல் செய்ய கால அட்டவணைப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. அரசு அறிவிப்புப்படி வரைவு அறிக்கையை நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டமாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
அரசு தாக்கல் செய்த அறிக்கைபடி வருகிற 2026 பிப்ரவரி மாதத்திற்குள் யானை வழித்தடம் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அப்படி அரசு யானை வழித்தடம் குறித்த அறிவிப்பை வெளியிடாவிடின் அரசு நியமித்த குழுவின் அறிக்கை அடிப்படையில் யானை வழித்தடங்களை நீதிமன்றமே அறிவிக்கும்." என்று கூறினார்கள். மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதி தள்ளி வைத்தனர். இதனால் யானை வழித்தடம் குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications