சென்னையில் ஐடி கம்பெனிகள் இயங்கலாம்.. 10% ஊழியர்களுக்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: சென்னையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் 10 சதவீத பணியாளர்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கலாம், ஊழியர்களுக்கான வாகன சேவையை அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தமிழகம் முழுக்க தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சென்னை மாநகர எல்லைக்குள் பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் ஐடி நிறுவனங்களை பொருத்தளவில் எப்போது அவை இயங்க தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில்தான் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் உள்ள நிறுவனங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கி கொள்ளலாம் என்று தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிரீன் சிக்னல்.. சென்னை டிராபிக் விதியில் அதிரடி மாற்றம்.. பின்னணி காரணம்.. தமிழகம் முழுக்க வருமா?
குணமடைவோர் அதிகம்
இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு கொரானா நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குபின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகும். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருந்து வருகிறது.
ஜூலை 31 வரை ஊரடங்கு
இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல் படுத்தியது. இதை தொடர்ந்து நோய்த்தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சில தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகள்
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளும், தளர்வுகளுடன் இந்த ஊரடங்கில் நடைமுறையில் உள்ளது. தற்போது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை (கன்டெய்ன்மென்ட் பகுதிகள்) தவிர, மற்ற பகுதிகளில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் அந்த நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
பொதுமக்கள், வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கழுவுவதையும், வெளியிடங்களில் முக கவசத்தை அணிந்து செல்வதிலும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்கவும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.