தீர்வு காணாமலே திறக்கப்பட்ட கிளாம்பாக்கம்.. தமிழக அரசு இனியாவது கவனிக்குமா? சென்னைவாசிகள் கவலை
சென்னை: தீர்வு காணாமலேயே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையமும், மேம்பாலமும் அமைக்கப்படாமலேயே சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்ற போதிலும், இந்த பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு வடபழனி, ஈக்காட்டு தாங்கல் மற்றும் விமான நிலையம், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களில் செல்லும் பொதுமக்களுக்காக இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாக திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளாம்பாக்கம் , வண்டலூர், தாம்பரம் பகுதி மக்களிடையே எதிர்பாரப்பு நிலவியது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டள்ளது. இந்த பேருந்து நிலையம் நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று தான். இந்த பேருந்து நிலையம் காரணமாக சென்னையில் ஓரளவு நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி சில அடிப்படையான பணிகள் இன்று வரை ஆரம்பிக்கப்படவே இல்லை.. கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் இன்று வரை அமைக்கப்படவில்லை. அதேபோல் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இவை இரண்டும் அமைக்கப்பட்டால் மட்டுமே மக்களுக்கு எளிதாக இருக்கும் என்கிற நிலை இருக்கிறது. மேம்பாலம் அமைக்காவிட்டால், வண்டலூர் மேம்பாலத்திற்கு அடியில் சென்று திரும்ப வேண்டிய நிலையே ஏற்படும். மேம்பாலம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
ஆனால் இதை எல்லாம் கடந்த 2018ம் ஆண்டே திட்டமிடாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மக்கள் பல்லாயிரம் பேர் வந்து செல்ல உள்ள கிளாம்பாக்கத்தில் மேம்பாலமும், ரயில் நிலையமும் முன்னதாக திட்டமிட்டு அமைத்திருந்தால் பெரிய அளவில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். அதேபோல் தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் நான்காவது ரயில் பாதையை உடனடியாக அமைக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும். அப்போது தான் இன்னும் சில ஆண்டுகளில் கிளாம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர்,பொத்தேரி, செங்கல்பட்டு பகுதிகளில் ஏற்பட போகும் அசுர வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசு இந்த விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரயில் நிலையம் மிக முக்கியம்: கிளாம்பாக்கம் என்பது சென்னையில் இல்லை. சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதற்கு வருவதற்கு ரயில், மெட்ரோ உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை.. பேருந்து ஒன்று தான் வசதியாக உள்ளது. சென்னையின் மையப்பகுதிகளில் உள்ளவர்கள் தென்மாவட்டங்கள் செல்ல, பைகளை எடுத்துக்கொண்டு அலைவது கடினம். எனவே அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு புறநகர் ரயில் நிலையத்தை உடனே கிளாம்பாக்கம் பகுதியில் அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications