சென்னை பெண் ஐடி ஊழியரை பின்தொடர்ந்த பரோட்டா மாஸ்டர்.. சாலையில் நடந்த பகீர் சம்பவம்
சென்னை: சென்னை துரைப்பாக்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஐடி ஊழியரை, வாயை மூடி இழுத்து செல்ல முயற்சி செய்த பரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடம் உள்ளிட்ட எந்த பகுதியும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைப்பதில்லை என்பது புகாராக உள்ளது. அந்த வகையில் சென்னையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் சுமார் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அந்தப் பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு ஆசாமி அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அந்தப் பெண் வேக வேகமாக நடக்க, அந்த நபர் திடீரென பெண்ணின் வாயை மூடி அவரை இழுத்து செல்ல முயற்சி செய்துள்ளார். பதறிய அந்தப் பெண் உடனடியாக கத்தி கூச்சலிட்டுள்ளார். இதை எதிர்பாராத அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். அருகில் இருந்தவர்களின் உதவியை அணுகுவதற்குள் அவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
இதையடுத்து அந்தப் பெண்ணும் அங்கிருந்து உடனடியாக துரைப்பாக்கம் காவல்நிலையம் சென்றுள்ளார். அங்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பெண் அளித்தப் புகார் உறுதி செய்யப்பட்டது. அவரைப் பிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.
காவல்துறை விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 24) என்று தெரியவந்தது. மேலும் அவர் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருவதும் கண்டறியப்பட்டது. சிறிது நேரத்திலேயே காவல்துறை அவரை கைது செய்தனர். யோகேஸ்வரன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தின்போது யோகேஸ்வரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ஐயா மன்னிச்சுக்கோங்க. குடிபோதையில் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் காவல்நிலைய கழிப்பறையில் அவர் வழுக்கி விழுந்ததில், லோகேஸ்வரன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications