அஸ்ஸாம் அமைச்சரின் மருமகன் என கூறி சென்னை நபரிடம் ரூ 1.25 கோடி மோசடி.. கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்
சென்னை: மதுரையைச் சேர்ந்த ரவுடி ஒருவர் தன்னை அஸ்ஸாம் மாநில அமைச்சரின் மருமகன் என கூறி ரூ 1.25 கோடியை மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தொலைதூர கல்வி நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு கார்த்திக் பிரசன்னா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!
அப்போது அவர் அஸ்ஸாம் மாநில அமைச்சரின் மருமகன் என கூறி அவருடன் எடுத்ததாக சில புகைப்படங்களையும் முத்துக்குமரனுக்கு அனுப்பியுள்ளார். இதை முத்துக்குமரன் நம்பியுள்ளார்.
ஒப்பந்த அடிப்படை
பின்னர் ரயில்வே துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவருக்கு ரூ 3.5 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கமிஷன் தொகையாக ஒருவருக்கு 25 ஆயிரம் வாங்கி தருவதாகவும் முத்துக்குமரனிடம் கார்த்திக் பொய்யான தகவல்கள் அள்ளி வீசியுள்ளார்.
ஏஜெண்ட்டாக
இதை நம்பிய முத்துக்குமரன் தான் ஏஜெண்ட்டாக செயல்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு சிலரிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1.25 கோடி ரூபாயை பெற்று கார்த்திக் பிரசன்னாவின் மனைவி ராணி தேவியின் வங்கிக் கணக்கிற்கு முத்துக்குமரன் செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நாளாகியும் அவர் கூறிய ஒருவருக்கும் கூட வேலை வாங்கித் தரவில்லை.
மேலும் கூறியபடி கமிஷன் தொகையும் கார்த்திக் கொடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த முத்துக்குமரன் ரயில்வே துறையில் கார்த்தி குறித்து விசாரித்துள்ளார். அப்போதுதான் கார்த்திக் அஸ்ஸாம் அமைச்சரின் மருமகன் என கூறியும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் நிறைய பேரிடம் பண மோசடி பெற்றுள்ளார் என்பது முத்துக்குமரனுக்கு தெரியவந்தது.
அதிர்ந்த முத்துக்குமரன்
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமரன், கார்த்திக்கிடம் "நீ வேலை வாங்கி தர வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடு" என கேட்டுள்ளார். இதையடுத்து பணத்தை கொடுப்பதாக முத்துக்குமரனை கார்த்திக் எழும்பூரில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வருமாறு அழைத்துள்ளார்.
போலீஸ்
அங்கு சென்ற முத்துகுமரனை போலீஸ் என கூறி காரில் கடத்திச் சென்று அவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து அவரிடம் இருந்த ரூ 80 ஆயிரம் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து மதுரை ரவுடி கணபதி, கார்த்திக் பிரசன்னா மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாதுகாப்பு காவலராக இருக்கும் அருண்குமார் ஆகியோர் முத்துக்குமரனிடம் நிர்வாணப்படத்தை காட்டி மிரட்டி ரூ 15 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர்.
ஒருவர் கைது
இதையடுத்து முத்துக்குமரன் போலீஸில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவுடி கணபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்தி பிரசன்னா, அருண்குமாரை தேடி வருகிறார்கள். அஸ்ஸாம் அமைச்சரின் மருமகன் என கூறி ஒருவர் ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.