காலையிலேயே அதிர்ச்சி.. சென்னையை சூழ்ந்த கரும்புகை.. மணலி அருகே திடீர் தீ விபத்து.. அலறி ஓடிய மக்கள்
சென்னை: சென்னை அருகே தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை அடுத்த மணலியில் வாயக்காடு என்ற இடத்தில், தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இன்று அதிகாலை 1 மணியளவில் இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது..

குடோன்: இந்த குடோனில் தங்கியிருந்த ஊழியர்கள், குடோனில் தீ பற்றியதை பார்த்ததுமே, அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தனர்.
இதையடுத்து, எண்ணூர், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, மீஞ்சூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.. 50-க்கும் மேற்பட்ட வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகிறார்கள்..
தீயணைப்பு வீரர்கள்: ஆனால், மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கிவிட்டதால், தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.. எனவே, ராட்சத தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மீண்டும் தீயை அணைக்க வீரர்கள் முயன்றனர்.
ஆனால், அதற்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து, மெட்ரோ லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருகிறார்கள்.. ஆனாலும், அந்த பகுதியே அடர்ந்த கரும்புகையால் சூழ்ந்துள்ளது.. 100 அடிக்கும் மேலே கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கும் தீயை கட்டுப்படுத்த இதுவரை முடியவில்லை.
கரும்புகை: எனினும் மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம், தீயை கட்டுப்படுத்த வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.. இதனால் அந்த பகுதியில் காலையிலேயே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். மணலி பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications