சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது.. காயமின்றி தப்பினார்
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால் அந்த கார் மீது பிரியா சென்ற கார் மோதியது. இதில், பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற காரின் பின்பக்கமாக மோதியது. எனினும் மேயர் பிரியா காயமின்றி தப்பினார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகரமான சென்னையின் பட்ஜெட் வழக்கமாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 2024 - 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் பிரியா, வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடந்தது. அப்போது கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். இந்த நிலையில், சொந்த பணி காரணமாக மேயர் பிரியா வெளியூர் சென்றிருந்ததாகவும், இன்று அவர் சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அவரது கார் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது சென்னீர்குப்பம் அருகே வந்த போது திடீரென முன்னால் சென்ற கார் வளைவில் திரும்பியது. அப்போது மேயர் பிரியா சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. அடுத்த சில நொடிகளில், மேயர் பிரியாவின் காருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த லாரியும் மேயர் பிரியா சென்ற கார் மீது பின்பக்கமாக மோதியது.
அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மேயர் பிரியா சென்ற காரின் முன்பக்கமும், பின்பக்கும் சேதமடைந்தது. காரின் பின் பக்க கண்ணாடி உடைந்தது. இதன் பின்னர் தான் காரின் உள்ளே இருந்தது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா என்று தெரியவந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து அவர் மாற்று வாகனத்தில் அங்கிருந்து உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மேயர் பிரியாவின் கார் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மேயர் பிரியாவின் கார் விபத்துக்குள்ளான சாலையில் விளக்குகள் சரியாக எரிவதில்லை என்றும், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications