உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் இங்கெல்லாம் இடிமின்னலுடன் மிக கனமழை பெய்யும்!
சென்னை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 (20.11.2020) மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

தென் மாவட்டங்களில் மழை
21.11.2020 மற்றும் 22.11.2020 ஆகிய நாட்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

தஞ்சை புதுக்கோட்டை
நவம்பர் 23ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேகமூட்டம் காணப்படும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடலுக்கு செல்ல வேண்டாம்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் 10 செமீ மழையும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை ஆகிய ஊர்களில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்ககடல், தென் மேற்கு மத்திய கடல் பகுதிகளில், தமிழக கடலோர பகுதிகளிலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறவாளி காற்று வீசும். எனவே மீனவர்கள் வரும் 25ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications