சென்னை மெட்ரோ 2 என்பது தங்கப் புதையல்.. 100 சதவீதம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ள பொக்கிசம்.. எப்படி?
சென்னை: சென்னை மெட்ரோ 2 ரயில் திட்டங்களை தங்கப் புதையல் என்றே சொல்லலாம். ஏனெனில் சென்னை மெட்ரோ முதற்கட்டத்தை விட இரண்டாம் கட்ட சென்னையின் 90 சதவீத பகுதிகளை இணைக்கிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், பலர் கார்களில் செல்வதற்கு பதில் மெட்ரோவில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் 100 சதவீதம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ள பொக்கிசமாக பார்க்கப்படுகிறது.. எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னை மெட்ரோ முதல் கட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், திருவெற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் தினம் தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு சுமார் 90 லட்சம் பேர் வரை இப்போது பயணிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பார்க்கிங் , உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வரும் காலத்தில் சென்னை மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை அப்படியே பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1.50 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தினசரி சென்னை மெட்ரோவை பயன்படுத்தினாலும் மிகப்பெரிய அளவில் லாபமாக மாறும். 25 லட்சம் முதல் 30 லட்சம் பேர் தினசரி மெட்ரோ ரயிலை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
ஏனெனில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடம் சென்னை மாநகரத்தை முழுமையாக கவர் செய்கிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை ( 45.4கி.மீ ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை ( 26.1 கி.மீ. ) 4-வது வழித்தடம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை ( 44.6 கி.மீ. ) 5-வது வழித்தடமும் செயல்பட போகிறது.
இந்த மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று வழித்தடங்களில் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக ஐடி பகுதியான ஓஎம்ஆர் பகுதியை இணைக்கிறது. பல்லாயிரம் பேர் சென்னையில் வேலை செய்யும் பகுதி என்றால், அது சென்னையில் ஓஎம்ஆர் சாலை, ரேடியல் சாலை மற்றும் கந்தனன்சாவடி பகுதிகள் தான்.
வேளச்சேரியை ஒட்டியுள்ள இந்த பகுதிகளை சென்னை மெட்ரோவும் பறக்கும் ரயிலும் இணைப்பதால், கார்களில், இருசக்கர வாகனங்களில் பயணிப்பதற்கு பதில் மெட்ரோவில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் பூந்தமல்லி கலங்கரை விளக்கம் வழித்தடம் என்பது போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், திநகர், மயிலாப்பூர், மெரினா என சென்னையின் மையப்பகுதிளையும் இணைப்பதால், அப்படியே அவர்கள் மெட்ரோவில் பயணிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த வழித்தடத்தில் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வர ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை கூட ஆகும். மெட்ரோவில் வர மிகக்குறைவான நேரம் ஆகும் என்பதால், மக்கள் ஆர்வம் இந்த வழித்தடத்தின் மீதும் அதிகமாக உள்ளது.
இதுதவிர சென்னையில் புறநகர் ரயில்கள், ரயில் நிலையங்களைவிட சென்னை மெட்ரோ ரயில்களில் வசதிகள், கட்டமைப்புகள் அற்புதமாக இருக்கிறது. சென்னையில் பீக் அவர்ஸ் உள்டப எல்லா நேரமும் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து, பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, மெட்ரோவில் பயணிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. வரும் காலத்தில் சென்னையின் முக்கியமான போக்குவரத்தாக சென்னை மெட்ரோ உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.
எனவே அந்த வகையில் தினமும் பல கோடிகளை சம்பாதிக்கும் நிறுவனமாக சென்னை மெட்ரோ உருவெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் எந்த அளவிற்கு மக்களை கையாள்கிறதோ, அதே அளவிற்கு சென்னை மெட்ரோ பயணிகளை கையாளும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் நிச்சயம் தங்கப்புதையல். பல கோடிகளை லாபம் ஈட்டும் நிறுவனமாக சென்னை மெட்ரோ உருவெடுக்கும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், கடைகள், வணிக வளாகங்கள் மூலம் கணிசமாக லாபம் ஈட்ட முடியும் என்பதால், சென்னையை பொறுத்தவரை 100 சதவீதம் மெட்ரோ சக்சஸ்புல் திட்டமாகும்.
அதுமட்டுமின்றி, விமான நிலையத்தை தாண்டி, கிளாம்பாக்கம் வரையிலும், அந்த பக்கம் பூந்தமல்லி தாண்டி, பரந்தூர் விமான நிலையம் வரையிலும், இந்த பக்கம் தாம்பரம் வேளச்சேரி இடையேயும் 3ம் கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை மட்டுமின்றி புறநகரில் இருந்தும் பல்லாயிரம் பேர் தினமும் பயணிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் அடுத்த 5 வருடங்களில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே 2030க்கு பிறகு சென்னையில் மெட்ரோ ரயில் தான் பிரதான போக்குவரத்தாக மாற வாய்ப்பு உள்ளது. அதேபோல் சென்னையில் புறநகர் ரயில்கள் ஓடும் பகுதிகளில் மெட்ரோ ரயில்கள் விரைவில் ஓடினாலும் ஆச்சர்யப்படுதற்கு இல்லை..












Click it and Unblock the Notifications