கோயம்பேடு டூ வர்த்தக மையம் வழித்தடம்.. சென்னை மெட்ரோவின் அடுத்த இலக்கு என்ன? அர்ச்சுனன் பேட்டி
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடுத்த இலக்கு கோயம்பேடு - சென்னை வர்த்தக மையம் வழித்தடம் தான் என்று திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார். போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கோயம்பேடு - சிடிஎஸ் இடையிலான வழித்தடப் பணிகளை ஜூனில் முடிக்க தயாராகி வருவதாக கூறியுள்ளார்.
போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே ரயில் என்ஜின் மூலமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது முழு மெட்ரோ ரயிலையும் இயக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனார். அதேபோல் தொழில்நுட்ப அம்சங்களும் உறுதிப்படுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

இதன்பின்னர் பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தின் சேவையை பிப்ரவரி 2வது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டால், பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு 25 நிமிடங்களில் சென்றடைய முடியும். ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அடுத்த இலக்கு குறித்து திட்ட இயக்குநர் அர்ச்சுனன் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அர்ச்சுனன் பேசுகையில், பூந்தமல்லி - போருர் இடையிலான சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. முதலில் கீழ் லைனிலும், பின்னர் மேல் லைனிலும் நடத்தினோம். இப்போது அனைத்து சோதனைகளும் முடிவடைந்துவிட்டது.
அதேபோல் டிராக் சுமார் 14 ஆயிரம் மீட்டர் தூரம் வரை போடப்பட்டுள்ளது. 4 மாதங்கள் முன்பாக வரை அதில் 10 ஆயிரம் மீட்டர் தூரம் மீதமிருந்தது. அதனை செய்ய முடியுமா என்பதே சவாலாக இருந்தது. இது சாத்தியமில்லாதது போல் தோன்றினாலும், பின்னர் இரவு பகலாக சுமார் 500 பணியாற்றி பணிகளை முடித்தோம். ஒவ்வொரு இரவும் பணிகளை செய்திருக்கிறோம்.
இந்த சோதனை ஓட்டம் முடிவடைந்ததற்கு குழுவின் பங்களிப்புதான் காரணம். இந்த சோதனை ஓட்டம் 10 - 15 கிமீ வேகத்தில் நடைபெற்றது. விரைவில் சான்றிதழ் பெற்றபின், ரயில்வே துறை அனுமதி பெற்ற பின், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கூறுவோம். அதன்பின் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்கள். இந்த மெட்ரோ ரயிலை வடபழனி வரை கொண்டு வந்தது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறோம்.
அதேபோல் மதுரை, கோவை மெட்ரோவுக்கான பணிகள் எதுவும் நிற்கவே இல்லை. இடம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்திற்கு பின், அடுத்த இலக்காக கோயம்பேடு முதல் சென்னை வர்த்தக மையம் இடையில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதில் இன்னும் 20 ஆயிரம் மீட்டர் டிராக் போட வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications