வேடிக்கை பார்க்கும் மும்பை, பெங்களூர்.. சைடு கேப்பில் தரமான சம்பவம் செய்த சென்னை மெட்ரோ.. செம
சென்னை: மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக புதிய feeder பேருந்துகளை களமிறக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவை ஏசி பேரூந்துகளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகள் இனி கடைசி மைல் இணைப்புக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்க, பெருநகரப் போக்குவரத்து கழகம் (MTC) 220 புதிய ஏசி எலக்ட்ரிக் மைக்ரோ பேருந்துகளை (5-6 மீட்டர் நீளம்) அறிமுகப்படுத்தவுள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக புதிய பேருந்து
இந்த மைக்ரோ பேருந்துகளின் வழித்தட ஒருங்கிணைப்பு, சார்ஜிங் வசதிகள் மற்றும் வெளியீட்டு காலக்கெடு குறித்து விவாதிக்க நவம்பர் 3-ஆம் தேதி அன்று ஒரு முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் MTC, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும்.
இந்த திட்டம், மெட்ரோ பயணத்தை எளிதாக்குவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றி, தனிப்பட்ட வாகனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும். தற்போது, MTC நிறுவனம் 11 வழித்தடங்களில் 22 சிறிய பேருந்துகளை இயக்கி, மெட்ரோ பயணிகளுக்கு கடைசி மைல் இணைப்பை வழங்கி வருகிறது.
11 வழித்தடங்களில் 22 சிறிய பேருந்துகள்
"கடைசி மைல் இணைப்புக்கு மேலும் பேருந்துகள் தேவை என CMRL கேட்டபோது, எங்களிடம் இருக்கும் 200 பேருந்துகள் கொண்ட சேவையில் இருந்து பேருந்துகளை எடுக்க முடியவில்லை. அது எங்களின் வழக்கமான சேவைகளை பாதிக்கும். எனவே, 5-6 மீட்டர் நீளமுள்ள 220 புதிய பேருந்துகளுக்கு டெண்டர் விட முடிவு செய்தோம்," என்று MTC நிர்வாக இயக்குநர் டி. பிரபாகரன் தெரிவித்தார்.
இந்த புதிய பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை CMRL தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். "இந்த சேவைகள் CMRL பயணிகளுக்கு மட்டுமேயானது. குறுகிய சாலைகளிலும் சென்று பயணிகளை வீட்டருகே ஏற்றிச் செல்லும் சிறிய பேருந்துகளை நாங்கள் வாங்குகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த பேருந்துகள் அனைத்து 41 மெட்ரோ நிலையங்களையும் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுடன் இணைக்கும். மெட்ரோ ரயில்களின் நேரங்களுக்கு ஏற்ப இந்த பேருந்துகளின் சேவைகள் திட்டமிடப்படும், இதனால் பயணிகள் ரயில் வந்தவுடன் நேரடியாக பேருந்தில் ஏற முடியும்.
41 மெட்ரோ நிலையங்கள்
CUMTA அதிகாரிகள் இந்த பேருந்துகள் குளிரூட்டப்பட்டதாக இருக்கும் என்று தெரிவித்தனர். "சென்னை ஒன் செயலி மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் மற்றும் பேருந்து நேரங்களை அறிந்துகொள்ளலாம்," என்று ஓர் அதிகாரி கூறினார்.
இதற்கிடையில், இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சென்னையில் ஆட்டோக்கள் ஆதிக்கம், அதிக கட்டணம் வசூலிக்கும் கேப்களின் ஆதிக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த பேருந்துகள் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.
முக்கியமாக மக்கள் மெட்ரோவை பயன்படுத்தும் எண்ணிக்கை உயரும். இதனால் சாலைகளில் நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications