புது மெட்ரோ வருது.. மாதவரம் முதல் எண்ணூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம்.. CMRL அதிரடி முடிவு!
சென்னை: மாதவரம் - எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரை இரண்டாம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்பட உள்ளது. சுமார் ரூ.63,246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், மாதவரம் முதல் எண்ணூர் வரையிலான 16 கி.மீ தொலைவுக்கு புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications