சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள்.. சட்டமன்றத்தில் அப்பாவு கொடுத்த அப்டேட்
சென்னை: நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சட்டமன்றத்தில் இன்று பேசிய சபாநாயகர் அப்பாவு சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 6 ஆம் தேதி) காலை 9.30 மணியளவில் தொடங்கியது. வருகிற 11 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பல முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன.

முதல் நாளிலேயே பல்வேறு அசம்பாவிதம் நடைபெற்றது. தேசிய கீதம் புறக்கணிக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி, கூட்டத் தொடர் தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தன் உரையை வாசிக்காமல் சென்றார். இது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் ரவிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதேபோல அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அதிமுகவினர் தீவிரமாக கையில் எடுத்தனர். யார் அந்த சார் என்று ஸ்டிக்கர் ஒட்டிய சட்டையுடன் அதிமுகவினர் சட்டமன்றத்துக்குள் வந்தனர். யார் அந்த சார் என்று அதிமுகவினரும் முழக்கமிட்டனர். இதனால் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மறுபக்கம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று தவாக எம்எல்ஏ வேல்முருகன் முழக்கமிட்டார். இதே பிரச்னைக்காக பாஜக, பாமக எம்எல்ஏக்களும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள். இதன் காரணமாக சட்டமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஆளுநர் தன் உரையை வாசிக்காததால் அவரின் உரையை தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அப்போது அப்பாவு பேசும்போது, மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணிகள் 50-50 பங்கு விகிதத்தில் மூலதனம் அளிக்க நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டது.
இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு இறுதியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திட்டமிட்டவாறு இந்தப் பணிகளை விரைவில் தொடங்கி முடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. அதேபோல மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது. இந்த திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சாலைப் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் கணிசமான முதலீடுகளை ஈர்க்கவும், உலகத்தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு திட்டங்களை தலைசிறந்த மேலாண்மை நடைமுறைகளை கொண்டு செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாநிலம் நெடுஞ்சாலைகள் ஆணையத்தை அரசு உருவாக்கியுள்ளது. அரசின் இந்த முயற்சி மாநிலம் முழுவதும் விரைவான, பாதுகாப்பான பயணத்துக்கு உதவும்.
மாநிலத்தில் தொழில் புரிவதை எளிதாக்கவும், அரசின் சேவைகளை பெறுவதற்கான பொதுமக்கள் கடைபிடிக்கும் சட்ட விதி முறைகளை எளிமையாக்கவும் பெரும் நிர்வாக சீர்திருத்தங்களை இந்த மாநில அரசு மேற்கொண்டுள்ளது. "என்றார்.












Click it and Unblock the Notifications