‛அரசு குடியிருப்பு’ பிரச்சனை.. 4வது நாளாக போராடிய நொச்சிக்குப்பம் மீனவர்கள் கைது.. பரபர சென்னை
சென்னை: சென்னையில் புதிய குடியிருப்புகளை தங்களுக்கு ஒதுக்ககோரி 4வது நாளாக தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்ட வந்த நொச்சிக்குப்பம் மீனவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதியும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி மற்றும் தற்போதைய திமுக ஆட்சியிலும் மீனவர்களுக்கு குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் நொச்சிக்குப்பத்தில் புதிதாக குடிசை மாற்று வாரியத்தால் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

நொச்சிக்குப்பம் விரிவடைந்த மீனவ குடும்பங்களுக்காக மொத்தம் 1188 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் இந்த குடியிருப்புகள் மாற்று கிராம மக்களுக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் பிறருக்கு வழங்கப்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர். அதோடு இந்த குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இதற்கு முட்டுக்கட்டை போடும் மயிலாப்பூர் எம்எல்ஏ த வேலுவை கண்டித்தும் நொச்சிக்குப்பம் மீனவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் மீனவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கூறியும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் போலீசார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மயிலாப்பூர் அம்பேத்கர் மேம்பாலம் அருகிலுள்ள சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நொச்சிக்குப்பத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications