செந்தில் பாலாஜியின் இதயத்தில் 90 சதவீதம் அடைப்பு.. ரத்தம் உறைதலை தடுக்க சிறப்பு மருந்துகள்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் வலது புறம் 90 சதவீதமும் இடது புறம் 80 சதவீதமும் அடைப்பு ஏற்பட்டுள்ளது என ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்வதாக கூறியதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வலியால் சாய்ந்தார்.

அவரை அதிகாரிகள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நீண்ட நேரம் மயக்க நிலையில் இருந்தார் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவரது இதயதுடிப்பு சீரற்று இருந்ததால் நேற்றைய தினம் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. அதில் அவருக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
அவருக்கு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மனைவி மேகலா கேட்டுக் கொண்ட நிலையில் மருத்துவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் சென்னை நீதிமன்ற நீதிபதி அல்லி நேராக மருத்துவமனைக்கு வந்தார். அங்கு செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து அவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு விஷயத்தை புழல் சிறைத் துறை கையில் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் இன்றைய தினம் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்டது தொடர்பாக 3 மனுக்கள் மீது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இநத நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார் என்பது குறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தகவல்களை வழங்கியது. அதில் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் இருக்கிறார். அவரது இதயத்தின் வலது புறத்தில் 90 சதவீதம் அடைப்பும் இடது புறமும் 80 சதவீதம் அடைப்பும் இருக்கிறது. அவர் மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவையும் மருந்துகளையும் உட்கொண்டிருந்தார். நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அவர் காவேரி மருத்துவமனைக்கோ அப்பல்லோ மருத்துவமனைக்கோ மாற்றப்படுவார் என குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications