ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதல் வேலை.. அவங்களுக்கு புரியும் மொழியில் ஆக்ஷன்.. சார்ஜ் எடுத்த அருண்!
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக சார்ஜ் எடுத்துக்கொண்டார் அருண் ஐபிஎஸ். ரௌடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி என சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை என அடுத்தடுத்து பரபர புகார்கள் எழுந்து வந்த நிலையில், காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
1998 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அருண், பல மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர். கள்ள லாட்டரிச் சீட்டு ஒழிப்பிலும், கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும் முத்திரை பதித்தவர். அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன ஐபிஎஸ் அதிகாரியான அருண் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உடனடியாக இன்றே சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் அருண் ஐபிஎஸ். 110-வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை புதிய காவல் ஆணையர் அருண், "சென்னை மாநகரம் ஒன்றும் எனக்குப் புதிதல்ல. அண்ணா நகர், பரங்கிமலை, துணை ஆணையராக பணியாற்றியுள்ளேன். சென்னை போக்குவரத்து காவல்துறையிலும் பணியாற்றி உள்ளேன். சென்னையில் கொலைகள் குறைவாகவே நடந்துள்ளன. இதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
சென்னையில் ரௌடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை கொடுக்கப்படும். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சென்னை கமிஷனர் அருண், "சென்னை மாநகரில் உள்ள ரௌடிகள் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, போதைப்பொருள் தடுப்பு, சட்டம் ஒழுங்கு என அனைத்தையும் சரி செய்வேன். காவல்துறையில் இருக்கக்கூடிய கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றையும் கட்டுப்படுத்துவது எனது முன்னுரிமையாக இருக்கும்.
ரௌடிகள் ஒடுக்கப்படுவார்கள். ரௌடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் சொல்லிக்கொடுப்போம். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications