அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக போராட்டம்.. நள்ளிரவு வந்த மெசேஜ்.. சென்னையில் திமுகவினர் கைது
சென்னை: தவெக அரசு ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அமைச்சர் சரத்குமார் போதை மருந்து பயன்படுத்தியதாக வீடியோ வெளியானதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. சென்னையில் திமுக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் போராட வந்த திமுக மாணவரணியினரை கைதும் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சரத்குமார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி காண சென்றுள்ளார். அப்போது அவர் மாத்திரையை பொடியாக்கும் வீடியோவை, தக் லைப் என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார். முதலமைச்சர் விஜய் போதை மருந்தை ஒழிப்பதற்கான மாரத்தானில் கலந்து கொண்ட அதே நாள் இந்த வீடியோ வெளியானது சர்ச்சையானது.

அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக போராட்டம்
சரத்குமாருக்கு கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருத்து கூறி வருகின்றன. இந்த விஷயத்திற்கு சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். உடல்நலம் சரியில்லாத குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி, சிரஞ்ச் மூலம் கொடுத்ததாக அவர் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, திமுக மாணவரணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என்று காவல்துறை மறுத்துள்ளனர். அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக திமுக நிர்வாகிகளை காவல்துறை செய்தனர். அப்போது காவல்துறை, திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுகவினர் கைது
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் கூறுகையில், "மற்ற இடங்களில் எல்லாம் போராட்டம் நடக்கிறது. சென்னையில் திட்டமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று தடுக்கிறார்கள். கடைசி நேரத்தில் நள்ளிரவு தான் அனுமதியில்லை என்கிறார்கள். போதை மருந்து பயன்படுத்தியவரை கைது செய்ய துப்பில்லாத காவல்துறை எங்களை கைது செய்கிறது தவெக அரசு மற்றும் காவல்துறையின் அராஜக போக்கை கண்டிக்கிறோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications