"இது ராமராஜ்யம்.!" நாங்க 80%.. நீங்க வெறும் 20% தான்! திமிராக அதட்டிய சென்னை காவல் அதிகாரி சஸ்பெண்ட்
சென்னை: வாட்ஸ்அப்பில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதற்காகச் சென்னையில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் என்பவர்கள் சமூகத்தில் எந்தவொரு தவறையும் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள். இவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஒழுக்கமும் பொறுமையும் இருக்க வேண்டும்..

இருப்பினும், இங்கு அனைத்து போலீசாருக்கும் அப்படி இருப்பதில்லை. போலீசாரே ஒரு பக்கச் சார்பு நிலையை எடுத்துச் செயல்படுவதாகப் புகார்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
சர்ச்சை ஆடியோ: கிறிஸ்டோபர் என்பவர் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் கிறிஸ்தவ பாடல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பொதுவான வாட்ஸ்அப் க்ரூப் என்ற போதிலும் சிலர் இதுபோன்ற மத ரீதியான பாடல்களைப் பகிரவே செய்வார்கள். பெரும்பாலும் இதை யாரும் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். இருப்பினும், அந்த க்ரூபில் இருந்த புளியந்தோப்பு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர் இதற்கு அளித்த பதில் தான் சர்ச்சையைக் கிளப்பியது.
ராஜேந்திரன் அனுப்பிய ஆடியோவில், "சிறு தண்ணீரைத் தெளித்தால் உடனே நடக்கவே முடியாதவர்களும் எழுந்து நடப்பார்கள் என்றெல்லாம் வரிகள் இருக்கிறது. இதெல்லாம் உண்மையில் நடக்குமா? எனவே இது போன்ற பாடல்களை எல்லாம் எல்லா வாட்ஸ்ஆப் க்ரூப்களிலும் பகிரக் கூடாது.. இது இந்தியா என்பதை நீங்க நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ராம ஜென்ம பூமியில் மசூதியை இடித்துவிட்டுத் தான் கோயிலைக் கட்டியுள்ளோம்.
பாகிஸ்தான் போங்க: புது நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலையும் வைத்துள்ளோம். இந்தியாவில் உள்ளவர்கள் தான் பூஜை செய்வார்கள்.. கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் முடிந்தால் இதைத் தடுத்து நிறுத்திப் பாருங்கள்.. உங்களால் இங்கு இருக்க முடியவில்லை என்றால் தாராளமாக வெளியேறிவிடுங்கள்.. பாகிஸ்தான், அரபு நாடுகளுக்குச் செல்லுங்கள். அங்குப் போய் படித்து உங்கள் வேலையைப் பாருங்கள்..
இந்தியாவில் இருப்போரில் 80% இந்துக்கள் தான்.. இங்கே முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 20% மட்டுமே இருக்கிறார்கள்.. யார் மெஜாரிட்டியாக இருக்கிறார்களோ... அவர்கள் தான் இந்தியாவை ஆளுவார்கள்.. எனவே, இப்படிப்பட்ட மாடல்களை எல்லாம் க்ரூப்களில் பகிராதீர்கள்.. அதன் பிறகு இங்கே ராமராஜ்யம் நடக்கும்" என்று கூறியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.
நடவடிக்கை: இது நெட்டிசன்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூகத்தைக் கண்காணிக்கும் நிலையில் இருப்பவர் இதுபோல மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசலாமா எனப் பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
இருப்பினும், திட்டமிட்டு சிலர் இந்த ஆடியோவை பகிர்ந்து வருவதாகவும் நீண்ட விவாதத்தின் ஒரு பகுதியான இந்த ஆடியோவை மட்டும் சிலர் திட்டமிட்டுப் பரப்புவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், கிறிஸ்டோபருக்கும் தனக்கும் பிரச்சினை இருப்பதாகவும் இந்த ஆடியோவை பரப்ப இதுவும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
காவல் ஆய்வாளரின் அந்த ஆடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அவர் மீது இப்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications