பிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்!
சென்னை: பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகாரை அடுத்து அதன் முக்கிய நிர்வாகிகள் மீது சென்னை போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிராங்க்ளின் டெம்பிள்டன் என்ற பரஸ்பர நிதி நிறுவனத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

தமிழகத்திலும் இந்த நிறுவனத்திற்கு சென்னையில் 14-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 6 நிதி திட்டத்தை நஷ்டம் அடைந்ததாக கணக்குக் காட்டி இந்த நிறுவனம் திடீரென நிறுத்திவிட்டது.
இந்த ஆறு நிதித் திட்டத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 3 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் உள்ளனர். அந்த நிறுவனம் ரூ 25 ஆயிரம் கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்தியா முழுவதும் முதலீட்டாளர்கள் அந்தந்த மாநிலத்தில் புகார் அளித்தனர். அது போல் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்காக சென்னை பைனான்சியல் மார்க்கெட் அண்ட் அக்கவுண்டபிலிட்டி என்ற நிறுவனத்தின் மூலம் முதலீட்டாளர்கள் சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பிராங்கிளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி சந்தோஷ் தாஸ் கமாத், சஞ்சய் வி சாப்ரி, ஜெயராம் சுப்பிரமணியம் அய்யர், விவேக் குட்வா, சுப்பிரமணியம், பிரதீப் பி ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications