பொன்னேரி அத்திப்பட்டில் இரவு முதல் மின் துண்டிப்பு! சென்னை துறைமுகம் சாலையில் மக்கள் மறியல்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஏசி பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதனால் மின் பயன்பாடும் அதிகமாகவே உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த பற்றாக்குறையை போக்க ஆங்காங்கே மின்வெட்டு அமலில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் 4 ஆம் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால் வீட்டுக்குள் ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் அவதிப்படுகிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதி பொதுமக்கள் சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இன்று காலை 5 மணி முதல் 6.35 மணி வரை வேளச்சேரியில் மின் தடை ஏற்பட்டது. நுகர்வோரிடம் இருந்து ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக ரூ 11 வரை வசூலிக்கும் தமிழ்நாடு மின்சாரம் வாரியம் ஏன் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் ஏற்படுகிறது என்பதை விளக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலை 4 மணி முதல் மைலாப்பூரில் கரண்ட் இல்லை என்றும் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கத்திலும் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். அயனாவரம் - நம்மாழ்வார்பேட்டையிலும் கடந்த 7 மணி நேரமாக மின் தடை நீடிக்கிறது என நெட்டிசன்கள் புகார்களை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications