வேறு மாதிரி மாறிய சென்னை பப் விவகாரம்.. பெண்களை வீடியோ எடுத்த நிருபர் மீது கடுமையான பிரிவில் வழக்கு
சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் பாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சம்பவம் தொடர்பாக பிரபல தனியார் ஊடகத்தின் நிருபர் உள்பட சிலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் பார் (மதுபானக் கூடம்) ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகும் அதிகளவில் இளம் பெண்களும், இளைஞர்களும் மது குடித்துவிட்டு ஆட்டம் போட்டதாக சில ஊடகங்கள் கடந்த திங்கள் கிழமை அன்று செய்தி வெளியிட்டன.

மேலும், சம்பந்தப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் மது பாரிலிருந்து வெளியேறும்போது அதை அத்துமீறி சிலர்படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதனிடையே ஊடகங்கள் சில வெளியிட்ட வீடியோக்கள் வேகமாக பரவியது. இப்படி வீடியோ வெளியிடுவது அத்துமீறல் எனவும், தனிமனித உரிமையைப் பறிப்பதாக பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே நடந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்று பார் நிர்வாகி கூறினார். இதுபற்றி அவர் கூறும் போது, : கடந்த ஞாயிறு அன்று இரவு 11 மணியளவில் பாரினை வழக்கம்போல் மூட ரெடியானோம். அப்போது,அங்கு 6 பேர் கொண்டகும்பல் வந்தது. ஆனால் நேரம் முடிந்துவிட்டதால் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று அவர்களிடம் கூறினோம். ஆனால், அவர்கள் அதைக் கேட்காமல் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தார்கள். இதனால், நாங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, கதவை மூடினோம்.
உடனே அவர்கள் ஆபாச வார்த்தைகளால் விமர்சிக்க ஆரம்பித்தனர். வந்தவர்களில் ஒருவர் தான் மீடியாவில் இருப்பதாக கூறினார். மேலும், அவர்கள் கதவைப் பலமாக தாக்கியபடி இருந்தார்கள். நிலைமை மோசமாவதை அறிந்து நாங்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம்.
இதையடுத்து சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் காவலர்களுடன் அங்கு விரைந்து வந்தார். பின்னர், பாரில் இருந்த அனைவரையும் காவல் துறையினர் பத்திரமாக வெளியேற்றி கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென வந்த 2 செய்திச் சேனல்களின் நிருபர்கள் மற்றும் கேமராமேன்கள் வெளியேறிய இளைஞர்கள், இளம் பெண்களை அத்துமீறி வீடியோ எடுத்தார்கள். இது தவறு என நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்காமல் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டார்கள். இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிருபர் உள்பட சிலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், 20.11.2023 அன்று 0015 மணியளவில், நந்தனத்தில் (J1 சைதாப்பேட்டை காவல் நிலையம்) அமைந்துள்ள Big Bull Lounge என்ற தனியார் மதுக்கூடத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்த பின்னர் சென்ற ஐந்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மேற்படி மதுக்கூடத்தில் பிரச்சனை செய்துள்ளனர்.
அச்சமயம், பெண்கள் உட்பட சில வாடிக்கையாளர்கள் அம்மதுக்கூடத்தில் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதி போட்டி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். மேற்படி பிரச்சனை குறித்து தகவல் தெரிந்ததையடுத்து, பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் சிலருடன் அங்கு வந்துள்ளார்.
அவர்கள் அப்பிரச்சனையை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, சில அடையாளம் தெரியாத நபர்கள் மதுக்கூடத்திலிருந்து வெளியே வந்த பெண்கள் குறித்து தவறான, இழிவான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை கூறியுள்ளனர். அப்பிரச்சனையை பல்வேறு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன. இது குறித்து, 23.11.2023 அன்று, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த புகாரின் பேரில், மேற்படி பிரபல செய்தி தொலைக்காட்சி நிருபர் மற்றும் சிலர் மீது J1 சைதாப்பேட்டை போலீசாரால், சட்டப்பிரிவு 143, 341, 294(b). 354 (A), 509 மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் உள்ளது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications