அக்னி நட்சத்திரம் முன்னாடியே வந்திருச்சோ... சுட்டெரித்த வெயிலால் கருகிப்போன சென்னைவாசிகள்
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் உள்ள நிலையில் தமிழக தலைநகர் சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது.
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் முன்கூட்டியே வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் வகையில் சென்னைவாசிகளை வாட்டி வதைத்தது வெயில். இன்னும் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் அறிவித்துள்ளது வானிலை மையம்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதம் இறுதி வரை கொட்டித்தீர்த்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
பருவமழைகாலம் முடிவுக்கு வந்த நாளில் இருந்தே மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பசிபிக்பெருங்கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்னும் கடல்மட்ட வெப்பம் காரணமாக வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் வெப்ப காற்று வீசிவருகிறது.

வெப்பக்காற்று
கடலில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்ததால் தரைப்பகுதியை நோக்கி வீசும் காற்று வெப்பமாக உள்ளது. இந்த வறண்ட வானிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அனல் காற்று
சென்னையில் நேற்று வெயில் சுட்டெரித்தது. 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினார்கள். அனல் மற்றும் புழுக்கம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

68 ஆண்டுகளுக்குப் பின்
சென்னையில் கடந்த 1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம்தேதி 105 டிகிரி வெயில் கொளுத்தியது. 68 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு சென்னையில் வெயில் 106.34 டிகிரியாக அதிகரித்தது.

பல மாவட்டங்களில் வெயில் சதம்
திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களிலும் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர் மாவட்டத்தில் 104 டிகிரியாக பதிவானது. தமிழகத்தில் பல ஊர்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தாகம் தணிக்கும் பழங்கள்
கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டதால் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதற்காக சென்னையில் மண்பானை விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தாகத்தை தணிப்பதற்காக தர்பூசணி விற்பனையும் சூடு பிடித்துள்ளது. சென்னை நகரில் ஆங்காங்கே பல இடங்களில் தர்பூசணி அதிக அளவில் விற்கப்படுகிறது. பழரச கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கக் தொடங்கியுள்ளது.

வீட்டிற்கு பாதுகாப்பாக இருங்கள்
தமிழகத்தில் அனல் காற்று வீசும் எனவும் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications