சென்னை, காஞ்சிபுரத்தில் ஸ்கூல் போகும் நேரத்தில் மழை! பள்ளிகள் செயல்படுமா? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை, காஞ்சிபுரத்தில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் இயங்குமா என பெற்றோர்கள் தவித்து வரும் நிலையில் இரு மாவட்ட ஆட்சியர்களும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அது போல் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வேலூரில் கனமழை பெய்து வருவதால் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, நெற்குன்றம், அம்பத்தூர், ஆலந்தூர், தாம்பரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதிலும் தற்போது பள்ளிகளுக்கு கிளம்பும் நேரத்தில் பெய்து வருவதால் வேலூரை போல் சென்னைக்கும் விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிதமான மழையே பெய்து வருவதால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் செய்யார், வெம்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications