பெற்ற தாயே பச்சைக் குழந்தையை கட்டப் பையில் வைத்து வீசி கொன்ற கொடூரம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்து 43 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாயே கட்டைப் பையில் வைத்து வீசிக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது வீட்டின் அருகேயுள்ள காலி மனையில் குழந்தை வீசப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் செல்வா நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் (34). தனியார் கார் கம்பெனியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
பாரதி தனது 2 பெண் குழந்தைகளை வீட்டின் அறையில் உறங்க வைத்துள்ளார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தை காணவில்லை என கத்தி கூச்சலிட்டுள்ளார். பாரதி கத்தி கூச்சலிடும் சத்தம் கேட்டதும் மேலே தூணி காயப்போட்டுக் கொண்டிருந்த மாமியார் மற்றும் அண்ணன் மனைவி இருவரும் வந்து என்ன என்று கேட்டுள்ளனர்.
அப்போது பாரதி, குழந்தையை கட்டிலில் உறங்க வைத்து விட்டு சமையலறைக்கு சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்த போது ஒரு குழந்தையை காணவில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் குழந்தையின் தாய் மற்றும் வீட்டில் இருந்த உறவினர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து குழந்தையின் தாய் பாரதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணயில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது.
தனது ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும், இதனால் பாரதி அதிகளவில் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் இருந்த பிறந்து 43 நாட்களே ஆன குழந்தையை கட்டப்பையில் போட்டு வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் தூக்கி எறிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இறந்த நிலையில் குழந்தையை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தாய் பாரதி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications