சென்னை கல்லூரியில் வெடித்தது இதுதான்.. நாட்டு வெடிகுண்டு இல்லை.. தெற்கு மண்டல ஏசிபி விளக்கம்!
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு அல்ல என்றும் திருவிழாவில் பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசு தான் வெடித்தது என்றும் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ளது குருநானக் கல்லூரி. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குருநானக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் சிலர் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. இரு வேறு டிபார்ட்மெண்ட் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின்போது பலத்த சத்தத்துடன் வெடித்ததால் கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இந்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டா அல்லது தீபாவளி பட்டாசா என சம்பவ இடத்தில் பெறப்பட்ட தடயங்களை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டனர். ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி மானவர்கள் மோதலின்போது வீசப்பட்டது திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், "சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்படவில்லை. திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பட்டாசை வெடித்துவிட்டு ஓடியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளோம். மற்றொரு மாணவரைத் தேடி வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications