சென்னை பீச் தாம்பரம் ரூட்டில் மின்சார ரயில் சேவை திடீர் பாதிப்பு.. பீக் நேரத்தில் திண்டாடிய பயணிகள்
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை சிக்னல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம அலைமோதியது. பீக் நேரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரின் போக்குவரத்திற்கு உயிர் நாடியாக மின்சார ரயில்களே உள்ளன. அதிலும் பீச் - தாம்பரம் ரூட்டில் மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

மின்சார ரயில் சேவை பாதிப்பு
புறநகரில் இருந்து வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வரும் பயணிகள் மின்சார ரயில்களையே நம்பியிருக்கிறார்கள். இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில்தான் இன்று மாலை சென்னை பீச் - கடற்கரை ரூட்டில் மின்சார ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
தண்டவாளத்தில் இறங்கி நடந்த பயணிகள்
ரயில்கள் பீச் ஸ்டேஷனில் இருந்து இயக்கப்படாமல் பார்க் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் தாமதம் ஆனதால், கடற்கரை ரயில் நிலைய அதிகாரிகளை முற்றுகையிட்டு பயணிகள் வாக்கு வாதம் செய்தனர். பயணிகள் பலரும் தண்டவாளம் வழியாக நடந்து சென்றதையும் காண முடிந்தது.
பூங்கா ரயில் நிலையம் அல்லது எழும்பூருக்கு செல்லும்படி பயணிகளுக்கு ரயில்வே ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தல் விடுத்தனர். குழந்தைகள், மற்றும் முதியவர்களுடன் வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரயில்வேயின் அறிவிப்பால் வேறு வழியில்லாமல் ஆட்டோ மற்றும் பேருந்துகளிலும் சென்றதையும் காண முடிந்தது. கடந்த இரண்டு வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 41 ரயில்களை ரத்து செய்து பராமரிப்பு பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.














Click it and Unblock the Notifications