அடையாறு முதல் பெசன்ட் நகர் வரை.. சென்னையில் 8 கிமீ நீளத்திற்கு ரெடியாகும் சூப்பர் நடைபாதை
சென்னை :சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோமீட்டர் நீள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4-ம் தேதி தொடங்கி வைக்கிறார். அங்கு பெஞ்ச் அமைப்பது, சைன் போர்டு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
நவம்பர் மாதம் 5ம் தேதி அன்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் நடைபயணம் குறித்த விழிப்புணர்வை மக்களுடன் இணைந்து நடத்த போகிறார்கள்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக மிக நீளமான நடைபாதை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரையில் 8 கிமீ நீளத்திற்கு சுற்றுவட்ட பாதையில் பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கிறார்.
சென்னை அடையாறு எல்பி சாலை மேம்பாலம் அருகே உள்ள டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து தொடங்கும் இந்த நடைபாதை தியோசாபிகல் சொசைட்டி அமைந்துள்ள பெசன்ட் அவென்யூ வழியாக செல்கிறது. பின்னர் இந்த நடைபாதையானது 3வது அவென்யூவில் வலதுபுறம் சென்று இடதுபுறமாக 5வது அவென்யூவில் சென்று எலியட்ஸ் கடற்கரையை அடைகிறது. எலியட்ஸ் கடற்கரையின் முடிவில் அன்னை வேளாங்கண்ணி சாலையில் வலதுபுறம் திரும்பி, மீண்டும் 3வது அவென்யூவுடன் இணைக்கும் 2வது அவென்யூவில் வலதுபுறம் திரும்பி மீண்டும் வந்த இடத்திற்கே வருகிறது.
இந்த நடைபாதை குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நவம்பர் 4-ம் தேதி டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு முதல்வர் நடைபயணம் மேற்கொள்வார் என்றும் மேலும் 38 மாவட்டங்களிலும் இதேபோன்ற சுகாதார நடைபாதைகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று கூறினார்.
இதனிடையே பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்த நடைபாதை பகுதிகளில் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த சோதனை முகாம்கள் இருக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் சோதனை நடைபாதைகள் அமைக்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு முக்கிய காரணம், ஜப்பானின் டோக்கியோ சென்ற போது அங்கு அவர்கள் நடைபயிற்சிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பார்த்து வியந்தேன். தமிழகத்திலும் இதுபோல் அமைக்க வேண்டும் என்று விரும்பினேன்" என்று மா சுப்பிரமணியன் கூறினார்.
இதனிடையே சென்னையில் நடைபயிற்சிக்காக கூடுதல் நடைபாதைகள் உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அமர்வதற்கு சீரான இடைவெளியில் பெஞ்சுகள் அமைக்கப்படும் என்றும், நடைபாதைகள் சேதமடைந்த இடங்களில் மீண்டும் கட்டப்படும் என்றும் குப்பைகள் மற்றும் புதர்களை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications