அவசரமாக மதுரையில் தரையிறங்கிய சென்னை - தூத்துக்குடி விமானம்.. உள்ளே இருந்த அமைச்சர் எ.வ.வேலு!
சென்னை: மோசமான வானிலை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாள்தோறும் விமான சேவைகளை இயக்கி வருகிறது இண்டிகோ நிறுவனம். தினசரி சுமார் 8 விமானங்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்கின்றன. காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் இண்டிகோ விமானம் 7.35 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

அந்தவகையில் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமானம் தூத்துக்குடி சென்ற நிலையில் வானிலை மோசமாக காணப்பட்டது. இதனால் அங்கு தரையிறக்க முடியவில்லை. சில நிமிடங்கள் வானிலேயே வட்டமடித்தது. வானிலை தொடர்ந்து மோசமாகவே இருந்ததால் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது. அதில் இருந்த 77 பயணிகளும் மதுரையிலேயே தரையிறக்கப்பட்டனர்.
சென்னை - தூத்துக்குடி விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு பயணம் செய்திருந்தார். அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பயணிகள் அனைவரும் மதுரையிலேயே இறங்கினர். இதையடுத்து, கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் எ.வ.வேலு.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலையில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications