திருமணமாகாமல் பிறந்த பெண் குழந்தை! ஐந்தே நாட்களில் சிசுவை விற்ற காதல் ஜோடி! சென்னையில் பயங்கரம்
சென்னை: தலைநகர் சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை ஒன்று சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ள ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகளைத் தத்தெடுக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த முறையைப் பின்பற்றி குழந்தைகளைத் தத்தெடுக்கலாம்.
ஆனால், அப்படிச் செய்யாமல் சிலர் தவறான முறையில் குழந்தைகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இது இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும்.

குழந்தைகள் விற்பனை
குழந்தைகள் இதுபோல விற்கப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்ட விரோதமாகக் குழந்தைகளை விற்பவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தலைநகர் சென்னையிலேயே இதுபோல நடந்த மோசமான நிகழ்வு இப்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதல் ஜோடி
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக இளம் ஜோடி ஒன்று காதலித்து வந்து உள்ளனர். இருவரும் நெருக்கமாக இருந்துள்ள நிலையில், அந்த பெண் கருவுற்றுள்ளார். என்ன செய்வது என்றே புரியாமல் அந்த ஜோடி குழம்பியுள்ளது. அவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இருப்பினும், திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பிறந்துள்ளது என்பதால் இருதரப்பினரும் தங்கள் வீட்டில் இதைத் தெரிவிக்க அச்சமடைந்தனர்.

5 நாட்களே ஆன சிசு
அந்த குழந்தையை தங்களுடன் வைத்துப் பராமரிக்கவும் அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டிற்குப் பயந்த அந்த ஜோடி, குழந்தை பிறந்ததும் பச்சிளம் குழந்தையைக் குழந்தையை விற்கும் முடிவிற்கு வந்தனர். இதற்காக இடைத்தரகரையும் பிடித்து உள்ளனர். பிறந்து வெறும் 5 நாட்களில் இடைத்தரகர் மூலம் அவர்கள் குழந்தையை விற்றுள்ளனர். ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அந்த குழந்தை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இப்போது மீட்கப்பட்டு உள்ளது.

ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை
ரூ.2.5 லட்சத்திற்குக் குழந்தை விற்கப்பட்ட நிலையில், அதில் ரூ.1 லட்சத்தையும் அந்த காதலன் காதலிக்குப் பங்காகக் கொடுத்து உள்ளதும் அம்பலமாகி உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்துள்ள இந்தச் சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காதலன், இடைத்தரகர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications