சென்னை வேப்பேரி அருகே தறிகெட்டு ஓடி 5 வாகனங்கள் மீது மோதிய கார்! ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய மக்கள்
சென்னை: சென்னை வேப்பேரி அருகே தறி கெட்டு ஓடிய சொகுசு கார் மோதியதில் குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கார், ஒரு கார், இரு ஆட்டோக்கள், இரு இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி சாலையின் முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ, கார், இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் இரு பெண்கள், ஒரு குழந்தை, ஆட்டோ ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை மடக்கி பிடிக்க வாகன ஓட்டிகள் சிலர் முயற்சித்தனர். ஆனால் அந்த காரோ வேகமாக சென்ற போது மேலும் சில வாகனங்கள் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த இருவர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.
ஆனால் வாகன ஓட்டிகள் இருவரையும் பிடித்து சரமாரியாக அடித்தனர். தொடர்ந்து அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இரு நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது காரில் உகாண்டா கொடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் உகாண்டா தூதரக அதிகாரிகள் என்றும் சொல்லப்படுகிறது. எனினும் அவர்கள் யார், எங்கிருந்து வந்தனர், போதை பொருளை பயன்படுத்தியிருந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த காரில் வந்தவர்கள் தந்தை, மகன் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் அடித்த போதே நாங்கள் காரை ஓட்டவில்லை என அவர்கள் இருவரும் தெரிவித்தனர். ஆனால் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர், இல்லை, இவர்தான் ஓட்டினார் என தெரிவித்தார். இதையடுத்து அந்த நபருக்கு மேலும் தர்ம அடி விழுந்தது. அந்த பெண் வைத்திருந்த குழந்தைக்கு தலையில் அதிகம் காயமேற்பட்டதாக தெரிகிறது.
மேலும் அந்த இருவரும் ஓட்டுநர்தான் ஓட்டினார் என கூறிய நிலையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அந்த கார் அதி வேகத்தில்தான் வந்துக் கொண்டிருந்தது. ஒரு சின்ன குழந்தையின் தலையில் அதிக காயம் ஏற்பட்டது.
அதன் அம்மாவிற்கு லேசான காயம். அது போல் ஒரு ஆட்டோ மீது அந்த கார் மோதியதில் ஆட்டோ நொறுங்கியது. அதில் இரு பெண்கள் இருந்தனர். அவர்களை வெளியே எடுக்கவே முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் இணைந்து ஆட்டோவை இருபுறமும் இருந்து பிரித்தனர்.
அதன் பின்னர் அதிலிருந்த இரு பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநருக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை அலுவலகம் இருக்கும் இடத்திலிருந்தே அந்த நபர் அதி வேகத்துடன் மற்ற வாகனங்கள் மீது மோதினார். வாகனங்களை மோதி விட்டு நிற்காமல் தப்ப முயன்றார். ஆனாலும் பொதுமக்கள் அவரை துரத்தி பிடித்தனர்.












Click it and Unblock the Notifications